top of page

கதை 6 - காசும் மரியாதையும்

‘தம்பி கூத்தபிரான், அம்மாவுக்கு மருந்து குடுத்திட்டியா?’ அண்ணன் இரும்பொறை தென்னை மரத்திலிருந்து இறங்கியபடியே கேட்டான்.

‘அண்ணா! குடுத்துட்டேன் அண்ணா! அம்மா நல்லா தூங்குறாங்க.’ தம்பி கூத்தபிரான் வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து கீத்து பின்னிக் கொண்டே சொன்னான்.

‘இந்தா! ரெண்டு எளநி கொண்டுட்டு வந்துருக்கேன். அப்படி ஓரமா வையி. நான் போய் கொளத்துல குளிச்சிட்டு வாரேன்’ என்று சொல்லிவிட்டு அண்ணன் இரும்பொறை, துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிழக்கே போனான்.

‘அண்ணா! நாளைக்கு நீ தான் வேலைக்குப் போகனும். நான் வீட்டுல இருந்து அம்மாவை கவனிச்சுக்கனும். இன்னக்கு நான் வேலைக்குப் போய் வாங்கிட்டு வந்த கூலி நாலு காசு, விளக்கு மாடத்துல வச்சுருக்கேன்.’

‘சரிடா கூத்தா!’ என்று வேலியைத் தாண்டி போய்க்கொண்டே இரும்பொறை சொன்னான்.

வேலம்பாடி கிராமத்தில் இரும்பொறையும் கூத்தபிரானும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது தந்தை இறந்து விட்டார். தாய் நோய் வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தார். அதலால், அண்ணன் வேலைக்குப் போனால், தம்பி வீட்டில் இருந்து அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டும். தம்பி வேலைக்குப் போனால், அண்ணன் வீட்டில் இருந்து அம்மாவைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த கிராமத்துல ஒரு பண்ணையார் இருந்தாரு. அவர் கருமி மட்டுமல்ல ஏமாத்து பேர்வழியாகவும் இருந்தாரு.

__

அடுத்த நாள், தம்பி கூத்தபிரான் வீட்டில் இருந்தான். இரும்பொறை பண்ணையார்கிட்ட போய், ‘பண்ணையார் ஐயா! இன்னக்கி ஏதாவது வேலை இருந்தா குடுங்க ஐயா!’ என்றான்.

பண்ணையாருக்கு வேலையாள் தேவை தான். ஆனா அத வெளிக்காட்டிக் கொள்ளாம, ‘ஒன்னும் வேலை இல்லையப்பா’ எனச் சொன்னார்.

இரும்பொறை கெஞ்சினான்.

‘சரி! நீ ரொம்ப கெஞ்சி கேக்கறதால இன்னக்கி வேலை செய். சாயந்திரம் மூணு காசு தான் கூலியா தருவேன்’ என்றார். எல்லா இடத்திலும் நாலு காசு தான் கூலி. அதைக் குறைக்கத் தான் ‘வேலை இல்லை’ என்ற வேடத்தைப் போட்டார்.

‘அப்பறம், இப்பயே இன்னொன்னயும் சொல்லிடறேன். நான் ஏதாவது ஒரு வேலையைச் சொல்லி நீ செய்ய முடியல’ன்னா, நீ செய்ய முடியாத ஒவ்வொரு வேலைக்கும் ஒரு காசைக் கொறைச்சிடுவேன்’

‘சரிங்கய்யா!’ எனச் சொல்லிவிட்டு இரும்பொறை வேலைகளைத் தொடங்கினான்.

முழு நாளும் பல வேலைகளை இரும்பொறை செய்தான். மாலை கூலி வாங்க வேண்டிய நேரம். முகம், கை கால்களை கழுவி, துண்டால் துடைத்துக் கொண்டு, பண்ணையார் முன் போய் நின்றான். அவர், வாய் நிறைய வெத்தலை பாக்கு போட்டு குதப்பிக் கொண்டிருந்தார். வாயில் ஒரு பாட்டை முணு முணுத்துக் கொண்டிருந்தார்.

‘மழையை நம்பி ஏலேலோ மண்ணு இருக்க ஐலசா மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா என்னை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா உன்னை நம்பி ஏலேலோ யார் இருக்கா ஐலசா’

‘ஐயா! வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சு’ என்று சொல்லிவிட்டு, இரும்பொறை தலையை சொறிந்தான்.

பண்ணையார் பாட்டிலேயே அவனுக்குப் பதில் கொடுத்தார். வேலை எல்லாம் ஏலேலோ முடிஞ்சிடுச்சா ஐலசா முடிஞ்சிடுச்சுன்னு ஏலேலோ யாரு சொன்னா ஐலசா?

இரும்பொறை என்ன சொல்வதென்று திகைத்து நின்றான்.

‘பெரிய பானை ஏலேலோ அங்க இருக்கு ஐலசா -அதை சின்ன பானையில் போட்டுதான் எடுத்துட்டு வா ஐலசா’

‘ஐயோ! அதெப்படிங்கய்யா முடியும். பெரிய பானையை சின்னப் பானைக்குள்ள போட்டு எடுத்துட்டு வர முடியாதுங்கய்யா. முடியாதுங்கய்யா’

ஏற்கனவே ஏலேலோ சொன்ன மாதிரி ஐலசா ஒரு காசு ஏலேலோ கொறைச்சுடுவேன் ஐலசா’

‘பரவாயில்லங்கய்யா! மீதி ரெண்டு காசாவது குடுங்கய்யா. அம்மாவுக்கு மருந்து வாங்கனும்.’

இரும்பொறை கெஞ்சினான்.

வெற்றிலை சாறை ஓரமாகத் துப்பினார்.

‘இருப்பா! பாக்கி வேலை இருக்கே! அந்த கூரை வீட்டுல, வேகவச்ச ஈர நெல் இருக்கு. அதை வீட்டை விட்டு வெளியில எடுக்காம காய வைக்கனும்.’

‘ஈர நெல்லு. வெளியில எடுக்காம காய வைக்க முடியாதுங்கய்யா’

‘அப்ப. ….. ‘ஏற்கனவே ஏலேலோ சொன்ன மாதிரி ஐலசா ரெண்டு காசு ஏலேலோ கொறைச்சுடுவேன் ஐலசா’ எனப் பாடினார்.

‘பரவாயில்லங்கய்யா! மீதி இருக்கற ஒரு காசாவது குடுங்கய்யா. ஏதோ வந்ததுக்கு, ஒரு காசையாவது வாங்கிட்டுப் போறேன்.’

வெத்திலையில் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டே,

‘ குடுத்துடலாம் ஏலேலோ குடுத்துடலாம் ஐலசா இன்னுமொரு வேலையை குடுத்துடலாம் ஐலசா’ என்று பாடி விட்டு

‘இது கொஞ்சம் எளிதான வேலை. மூளைக்கு வேலை. இதுக்கு பதிலை சொல்லிட்டு அந்த ஒரு காசை வாங்கிட்டு சந்தோஷமா போ. மத்தவங்க காசு நமக்கு எதுக்கு?’ என்று சொன்னார். தொடர்ந்து கணக்கைப் போட்டார்.

‘என்னோட மொத்த எடை 140 கிலோ. இதுல என் தலையோட எடை மட்டும் துல்லியமா எவ்வளவு’ன்னு சொல்லு. சரியா சொல்லிட்டீன்னா, பாக்கி கூலியை உடனே தூக்கிப் போட்டுடுவேன்.’

‘அதெப்படிங்க ஐயா முடியும். தலையோட எடையை மட்டும் சொல்ல முடியாதுங்கய்யா’ இரும்பொறை சோகத்துடன் சொன்னான்.

பண்ணையார் பாடத் தொடங்கினார். ‘ஒப்பந்தப் படி ஏலேலோ ஒன்னுமில்ல ஐலசா மூணு காசும் ஏலேலோ முழசா இல்ல ஐலசா நியாயஸ்தானா ஏலேலோ நான் இருக்க ஐலசா ஓட்டாண்டியா ஏலேலோ நீ இருக்க ஐலசா

பண்ணையார் பாடிக் கொண்டிருக்கும் போதே, இரும்பொறை அங்கிருந்து கிளம்பி, வெறுங்கையுடன் விட்டிற்கு கிளம்பினான்.

__

வீடு.

‘ அண்ணா! வந்துட்டியா? ஒலைக்கு அரிசி வாங்கிட்டு வந்தியா? அம்மாவுக்கு மருந்து வாங்கிட்டு வந்தியா?’

இரும்பொறை, பண்ணையார் வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னான். இருவரும் பசியோடு தூங்கப் போனார்கள். பழைய கஞ்சியை அம்மாவுக்கு கொடுத்தார்கள். மருந்து கொடுக்கவில்லை.

__

அடுத்த நாள்.

இன்றைக்கு கூத்தபிரான் தான் வேலைக்குப் போகவேண்டும். இரும்பொறை வீட்டில் இருந்து அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

‘அண்ணா! பண்ணையார் வீட்டுக்கு வேலைக்கு போயிட்டு வர்றேண்ணா!’

‘ அங்கயா? அவரு பொல்லாதவரா இருக்காரே! வேற எடத்துக்கு போகலாமே’

‘ நான் பாத்துக்கறேண்ணா’

கூத்தபிரான் பண்ணையார் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

‘ என்ன கூத்தா! வேலை வேணுமா?’

‘ ஆமாங்கய்யா’

‘ நேத்த ஒங்க அண்ணன் வந்தான். சில வேலைகளை செஞ்சான். ஆனா, நிறைய வேலைகளை செய்யல. காலையிலயே போட்ட ஒப்பந்தப் படி, நியாயமா, எந்தக் கூலியும் வாங்காமப் போயிட்டான்.’

‘ நான் செஞ்சிடறேன்யா’

‘ ஒனக்கும் அதே ஒப்பந்தம் தான்’

‘ சரிங்கய்யா. மூணு காசு கூலியா கொடுப்பீங்க. நீங்க சொல்லி நான் செய்யாத வேலை ஒவ்வொண்ணத்துக்கும் ஒரு காசை கொறைச்சிடுவீங்க. அப்படித்தானய்யா’

‘ நீ புத்திசாலி புள்ள. கற்பூரம் மாதிரி புரிஞ்சிகிட்ட… சரி. சரி. மச மசன்னு நின்னு பேசிக்கிட்டு இல்லாம போய் வேலையைப் பாரு’

கூத்தபிரான் பண்ணை வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறான்.

மாலை வேளை. கூலி வாங்க வேண்டிய நேரம். பண்ணையார் வெற்றிலை பாக்குப் போட்டு மென்று கொண்டே, ஈஸி சேரில் உட்கார்ந்திருந்தார். அதே பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

‘ மழையை நம்பி ஏலேலோ மண்ணு இருக்க ஐலசா மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா என்னை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா உன்னை நம்பி ஏலேலோ யார் இருக்கா ஐலசா’

‘ஐயா! கூலி’

‘ இன்னும் ரெண்டு மூணு வேலை இருக்கே!’

‘ சொல்லுங்கய்யா. செஞ்சிடறேன்.’

‘ அந்த பெரிய பானையை எடுத்து, சின்ன பானையில் போட்டு எடுத்துட்டு வா’

கூத்தன் பெரிய பானையை சுக்கு நூறாக உடைத்து, சிறிய பானைக்குள் போட்டு எடுத்து வருகிறான்.

‘ஏ! ஏய்! ஏய்ய்ய்! என்ன பண்ற’

கூத்தன் பாடுகிறான்.

‘பெரிய பானை ஏலேலோ ஒடைச்சிருக்க ஐலசா சின்ன பானை ஏலேலோ நிறைஞ்சிருக்கு ஐலசா’

‘டேய்! டேய்!! டேய்ய்ய்… பானையை ஓடைச்சதும் இல்லாம, பாட்டு வேறயா’

‘ ஐயா! நீங்க சொன்னத செஞ்சேன்யா’

பண்ணையார் தனக்குள் பேசிக் கொள்கிறார்.

‘ என்ன இவன்! நம்மளே பெரிய எத்தன். இவன் நம்மள விட எத்தனா இருப்பான் போல இருக்கே. பரவாயில்ல…. இன்னும் இரண்டு வேலை இருக்குல்ல.. அதை வச்சு சமாளிப்போம்.’

பண்ணையார் கூத்தனைப் பார்த்து,

‘ சரி! அது கெடக்கட்டும். அந்தக் குடிசை வீட்டுல ஈர நெல் இருக்கு. அதைக்காய வைக்கனும். ஆனா, வெளிய எடுத்துட்டுப் போகக் கூடாது.’

‘சரிங்கய்யா!’ என்று சொன்ன கூத்தன் தென்னங்கீற்றால் கூரை வேய்ந்திருந்த குடிசை வீட்டிற்கு அருகே போனான். சர சர வென்று கூரையை பிச்சி எறிந்தான்.

‘டேய்! டேய்!! டேய்ய்ய்… என்னடா பண்ற?’ பண்ணையார் பதறினார்.

‘ நீங்க பேசாம இருங்க ஐயா! அப்பத்தான் வெயில் அடிச்சி, ஈர நெல்லு காயும்.’

‘ கூரையை இப்படி ஒன்னுக்கும் ஆகாம பிச்சிட்டியடா.’

‘கூர நல்லா ஏலேலோ பிஞ்சிடுச்சு ஐலசா ஈர நெல்லு ஏலேலோ காஞ்சிடுமே ஐலசா’ என பாண்டியன் பவ்யமாகப் பாடினான்.

‘டேய்! டேய்!! டேய்ய்ய்…இவ்வளவோ நஷ்டம் பண்ணிட்டியடா’ எனக் கதறிக் கொண்டே, அவருக்குள் பேசிக்கொண்டார். ‘ இரு. இரு. கடைசி காசை புடுங்கறேன்.’ பாண்டியன் பக்கம் திரும்பி,

‘ என்னோட மொத்த எடை 140 கிலோ. இதுல என் தலையோட எடை மட்டும் துல்லியமா எவ்வளவு’ன்னு சொல்லு. சரியா சொல்லிட்டீன்னா, எல்லா கூலியையும் உடனே தூக்கிப் போட்டுடுவேன்.’

‘ அது ரொம்ப ஈஸிய்யா’ என்று சொல்லிக்கொண்டே, தான் வைத்திருந்த அரிவாளை அவர் கழுத்தருகே கொண்டு போனான்.

‘ டேய்! டேய்!! டேய்ய்ய்… என்னடா பண்ணப்போற?’ எனப் பயத்தில், தொடைநடுங்கிக் கொண்டே, கதறினார்.

‘தலையை வெட்டி ஏலேலோ தனியா வச்சா ஐலசா

எடையை மட்டும் ஏலேலோ எடுத்துடலாம் ஐலசா’ என கூத்தபிரான் நக்கலாகப் பாடினான்.

‘ டேய்! டேய்!! டேய்ய்ய்…வேண்டாம்டா. உட்டுடுடா. பாருடே வேட்டியெல்லாம் நனைஞ்சிடுச்சு.’

‘ அப்ப, எங்க அண்ணன் கூலி மூணு காசு, அவனை ஏமாத்துனதுக்கு தண்டனை மூணு காசு, என் கூலி மூணு காசு, மொத்தம் ஒம்போது காசு குடுக்கறேன்னு ஒத்துக்கோ. அப்பத்தான் அரிவாள கழுத்துலேர்ந்து எடுப்பேன்.’

‘குடுத்துடறேண்டா’

‘ மரியாதை. மரியாதை’

‘குடுத்தடறேன்பா’

‘மரியாதை. மரியாதை’

‘குடுத்தடறேன்யா’

‘ ம் ! அது’

கூத்தபிரான் ஒன்பது காசுகளையும் வாங்கிக்கொண்டு, பாடியபடியே, வீட்டிற்கு வருகிறான்.

‘குறையாத ஏலேலோ கூலி வேணும் ஐலசா மரியாதை ஏலேலோ மாற வேணும் ஐலசா’ அறிவாக ஏலேலோ யோசிக்கனும் ஐலசா அன்பாக ஏலேலோ பேசிக்கனும் ஐலசா’

பாட்டு தென்றலில் கலந்து தெருவெங்கும் அலைகிறது.

***** படிப்பினை: ஆய்வுச் சிந்தனை, படைப்புச் சிந்தனை, நீதி, ஏமாறாமல் தப்பிப்பது, சாமார்த்தியம் எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம்

15 views0 comments

Recent Posts

See All

கதை 5 - பாண்டியன் கற்றுக்கொண்ட வெற்றிப்பாடம்

‘பாண்டியா! ஞாபகம் இருக்கா? பொங்கல் விழா வருது. நீ ஆயத்தமா இருக்கியா?’ பாண்டியனின் பாட்டி கேட்டாள். பாட்டிக்கு கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்த பாண்டியன் சிரித்துக் கொண்டே சொன்னான். ‘ஞாபகம் இருக்கு பா

கதை 4 - அரசர் ஓவியம்

ஓர் ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தன்னை ஓர் ஓவியமாக வரைந்து வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். அந்த ஊரில் குமரேசன் என்ற ஓவியன் இருந்தான். அவனை அரண்மனைக்கு வரச் சொல்லி உத்தரவு வந்தது. குமரேசனுக்கு மிகு

கதை 3 - மூங்கில் கூடும் மேலோகமும்

ஓர் ஊர்ல ஒரு ஞானி இருந்தாரு. அவர்ட்ட பல சீடர்கள் இருந்தாங்க. ஞானி சொல்றது வேதவாக்கு’ன்னு நம்புனாங்க. அதில் ஒரு சீடருக்கு மிருகங்களை வளர்க்கப் பிடிக்கும். அவர் பெயர் அன்பழகர். அன்பழகர் ஞானியின் பிரசங்க

bottom of page